பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

கிழிந்த சட்டை!




'விசித்திர பிறவிகள்' இப்படி சிலர் உண்டு!  நானும் அந்த வகைதான் என்று சொல்லிக்கொள்வதில் எந்த கூச்ச நாச்சமும் எனக்கு கிடையாது!!பொதுவாக திருவிழா ,பிறந்தநாள் எல்லாமே ‘நாளை மற்றொரு நாளே’ என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் எங்க அப்பா வீரமணி!
கம்யுனிஸ்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தனது மரணத்தின் இறுதி நாட்களிலும்  மறக்காமல் கடைப்பிடித்த காம்ரேட் அவர்.அதனாலேயே எங்கள் குடும்பத்தில் காது குத்து ,குலசாமிக்கு மொட்டை போன்ற சமாசாரங்கள் எதுவும் நடக்கவில்லை.இப்போது பலபேரிடம் காது குத்து வாங்குவது தனிக்கதை!கிராமத்தில் அப்போது புத்தாண்டு ,தீபாவளியெல்லாம் கிடையாது;பொங்கல் திருநாள்,எங்க வீட்டுக்கு எதிரே உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழா இரண்டும் மட்டும்தான்!ஜனவரியில் பொங்கல்...அக்டோபர் இறுதியில் கோயில் திருவிழா .....எப்படா வரும் என்று மனசு ஏங்கித்தவிக்கும்.அப்ப மட்டும்தான் புது துணி வாங்கிக்கொடுப்பார்கள்.எங்கள் வீட்டில் அதும் கிடையாது பொங்கல் மட்டும்தான் கொண்டாடணும் என்று உறுதியாக இருப்பார் அப்பா.
இங்கேதான் நான் விசித்திர பிறவியாக உரு மாற்றப்படுகிறேன்!எங்கள் வீட்டில் அண்ணன் ஜீவானந்தம்,ரெண்டாவது அண்ணன் அஜய் கோஷ் அப்பறம் மூனாவதாக நான்.விவசாய குடும்பத்துக்கே உரிய சட்ட திட்டங்கள் என் வாழ்க்கையிலும் அரங்கேறியது!பெரிய அண்ணன் போட்ட சட்டை ,டவுசர் சின்ன அண்ணனுக்கு...சின்ன அண்ணன் போட்டு முடித்த பிறகு எனக்கு!புது துணி எடுக்கிறதிலும் இந்த நடைமுறைதான் நீண்ட நாட்களாக கடைபிடிக்கபட்டு வந்தது.கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு கேள்வி கேட்க முடியாமல் போனாலும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு முறைப்புக் காட்டியதுக்கு பலன் கிடைத்தது;மூன்று பேருக்குமே புது துணி!
“பால்ராஜ் டைலர் கடையில குடுத்திருக்கேன் மூணு பேத்தையும் போயி அளவு குடுத்திட்டு வரச்சொல்லு”என்று அப்பா,அம்மாவிடம் சொன்னார்.”நல்லா ஏறக்கமா வச்சு தைக்கணும் அப்பத்தான் ரொம்ப நாளைக்கு ஒழைக்கும்”என அம்மா அவள் கவலையையும் சொல்லி அனுப்பி வச்சார்.எதுவும் மண்டையில் ஏறவில்லை!பால்ராஜ் அண்ணன் கடையில் போய் நின்றபோது மூச்சு வாங்கியது......! ”சுந்தரம்...இதான் உங்களோடது ....நல்லா இருக்கா!?” என்று பால்ராஜ் அண்ணன் கேட்டபோது,உலகமே உள்ளங்கைக்குள் வந்ததுபோல் அப்படி ஒரு ஆனத்தம்....அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை!”இது அண்ணன்களுக்கு என்று அடுத்து அவர் எடுத்துக்காட்டிய துணியைப் பார்த்ததும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது...மூன்று பேருக்குமே ஒரேமாதிரி கலரில் ஒரே மாதிரி சட்டை ,டவுசர்!

அடுத்தடுத்து வந்த திருவிழாக்களில் இந்த நடைமுறையை உடைத்தார் அம்மா! “உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லங்கிருதுக்காக....பாவம்,பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க;ஊருல அவங்க சோட்டு பசங்க புது துணி போட்டுட்டு வரும்போது பிள்ளைங்க மனசு கஷ்டப்படாதா....!அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த முதல் சம்பவம் அது!

அதற்கடுத்து வந்த திருவிழாக்கள் எதுவும் வாழ்க்கையில் இனி எப்போதும் திரும்ப வராது!”அவன் அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை எடுத்து தச்சுக்கிட்டும் ....காச குடுத்தனுப்புங்க!”அம்மா சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்கள் மூன்று பேருக்கும் காசு கொடுத்து அனுப்பினார் அப்பா .அம்மாவின் வார்த்தைக்கு அப்பா,ஒரு போதும் மறுப்பு சொல்லி நான் பார்த்ததில்லை!அம்மா மீதான அன்பு ஒருபுறம் என்றாலும் இன்னொரு காரணமும் உண்டு!நாள் முழுக்க கட்சி வேலை மட்டுமே அவருக்கு தெரிந்த உலகம்.விவசாயிகள் பிரசினை என்றால் முதல் ஆளாக நிற்கிற அப்பாவுக்கு ,தன் வீட்டில் இருக்கும் விவசாயம் குறித்த கவலை இல்லாமல் பார்த்துக்கொண்டார் அம்மா.மாதம் ஒரு முறை அல்லது இரு முறை நடக்கும் கட்சி கூட்டங்களுக்கு வருகிற தோழர்கள் அத்தனை பேருக்கும் சளைக்காமல் நாட்டு கோழி அடித்து ,நல்லெண்ணெய் ஊற்றி பக்குவமாய் பரிமாறுவதற்கு அம்மா,ஒரு போதும் முகம் சுழித்ததில்லை!இந்த புரிதல்களே அவர்கள்  இருவருக்குமான அன்பு.

இப்போ கைக்கு காசு வந்தாச்சு;அடுத்த கட்டம்!?என் அண்ணன்கள் தவிர்த்து,அண்ணன்களை நோட்டம்விட ஆரம்பித்தேன்!பெல்பாட்டம் பேண்ட்,பாபி காலர் சட்டை....இதை அடிசுக்காட்ட என்ன வழி...மண்டை காய்ந்ததில் சிக்கினார் ‘லிட்டோ’ டைலர்.அவர்தான் எங்க ஊர் இளசுகளுக்கு கனவு தைக்கிற சாமி!துணி எடுத்துக் கொடுத்தால்,முதலில் வருகிரவர்களுக்கே முன்னுரிமை (இப்ப மாதிரி முதலில் வருகிறவர்களுக்கே அல்ல!)!என் வரிசையை கணக்கு போட்டால் திருவிழா முடிந்த பத்து நாளைக்கு மேல் ஆகலாம் என்று டைலர் குருசாமி அண்ணன் சொன்னதும் ..ஆகாயம் தரைக்குள் நழுவிப் போய்க்கொண்டிந்தது.அப்போதெல்லாம் திரு விழாக்காலம் என்றால் முன் கூட்டியே இந்த வேலையை பார்க்கணும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.கஷ்டமர்தான் நமக்கு சாமி என்று குருசாமி அண்ணன் நினைத்திருக்க வேண்டும்;கேரளாவிலிருந்து தினக்கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து ,திருவிழாவுக்கு முதல்நாளே தச்சு கொடுத்தார் பாருங்க ...அன்னைக்கு ரெண்டு திருவிழா!
நெட்டு கோடு போட்டதோ,குறுக்கு கோடு போட்டதோ போட்டது போட்டபடி தைக்கிற நேரம் அது.”ஒரு பக்கம் நேட்டுகோடு,இன்னொரு பக்கம் குறுக்கு கோடு போட்டு தச்சால் எப்படிண்ணே இருக்கும்!” “நீ என்ன கிறுக்கனா!” என்னை மேலயும் கீலேயுமாக பார்த்தார் குருசாமி அண்ணன்!அப்படி தைக்கணும்னா...ரெண்டு மீட்டருக்கு பதிலா மூன்று மீட்டர் எடுக்கணுமாம்!அதையும் முயற்சி பண்ணிப் பார்த்தோம் ....ஊருக்குள் செம ரெஸ்பான்ஸ்.குருசாமி அண்ணன் ‘குரு’சாமி ஆகிட்டார்.
இது மாதிரியான தேடல்கள் சென்னையிலும் ஆரம்ப நாட்களில் தொடர்ந்தது.சென்னையின் நீள,அகலம் புடிபடுகிற காலத்தில் ‘ரெடிமேட் ட்ரெஸ்’.கடைக்குள் நுழைந்து காசு கொடுத்தால் வரும்போது புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு வரலாம்! ஆகா!இதுதாண்டா வரம் என்று 92ல் தொடங்கி இந்த ஞாயிற்று கிழமை முற்பகல் வரை இருந்தது!உடைத்து போட்டுவிட்டார் ஒரு டைலர் அண்ணன்!
பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் கூட நான் வீட்டில் இருப்பதில்லை!இன்று யதார்த்தமாக வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு ...பால்கனியில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துகொண்டிருந்தேன்.அப்பார்ட்மென்ட்டின் தரை தளத்தில் ஒரு டைலர் அண்ணன்,உடைந்து போன ஒரு தையல் மெஷினில் பழைய கிழிந்த துணிகளை தைத்துக்கொண்டிருந்தார்!பழைய துணிகளை போட்டு வைக்கும் பிளாஸ்டிக் பைகள் உட்பட....!ஒவ்வொரு வீடு வீடாக ஏறி இறங்கி ....”ஏதாவது பழசு தைக்க இருக்கா “எனக் கேட்டு தைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.அதற்கு கூலியாக கொஞ்சம் சில்லறை காசுகள் அவருக்கு கிடைக்கின்றன இந்த வாழ்க்கையில் என் அண்ணன்கள் தவிர்த்து எத்தனையோ அண்ணன்கள்என்னை வழி நடத்தியிருக்கிறார்கள்....இப்பவும்!எந்த ‘அண்ணாச்சி’களுக்கும் கிழிந்த சட்டை தைக்கிற சூழல் நேரக்கூடாது!
.இங்கே ஞாயிறு என்பதுபோல்;ஒவ்வொரு நாளுக்கு ஒரு அப்பார்ட்மென்ட் என அவர் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கும் என்பது அவர் சட்டையை பார்த்தாலே தெரிந்தது!
அடுத்த ஞாயிருக்காக நான்கைந்து சட்டைகளை கிழித்து வைத்திருக்கிறேன்;என்னால் வேறென்ன செய்யமுடியும்!?

தொத்தனுக்கு நேர்ந்த கதி!


‘தொத்தன்’இப்படி ஒரு பேரைக் கேட்டாலே பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.பேருதான் அப்படியே தவிர...ஆள் பலசாலி.அவனுக்கு ஏன் அப்படி ஒரு பேர் வந்தது என்று யாருக்குமே தெரியாது.யாரோ எப்போதோ பரிதாபப்பட்டு கொடுத்த சட்டையும்,வேஷ்டியும்தான் அவனது உடை.அது கூட கிழிந்து நார்நாராக தொங்கி கொண்டிருக்கும்.அதுக்கு மாற்று உடை யாராவது ஒரு புன்னியவான் கொண்டு வந்து கொடுத்தால்தான் உண்டு.புது துணி கிடைக்கும்போது சந்தோஷபட்டதாகவோ ....கிடைக்காததற்காக வருத்தப்பட்டதாகவோ தொத்தன் ஒருபோதும் காட்டிகொண்டதில்லை!

எங்கள் ஊரிலுள்ள பெருசுகள் தொடங்கி வாண்டுகள்வரை “டே...தோத்தா” என்றுதான் கூப்பிடுவார்கள்.”வந்தேன்”ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வந்து நிப்பான்.”சாப்பிட்டா?”என்று கேட்டால் “ம்....சாப்பிடலாம்!”என்று சொல்லிவிட்டு என்ன வேலை இருக்கு என்பதைப்போல பார்ப்பான்.விறகு வெட்டுவது தொடங்கி..மாடு குளிப்பாட்டுவது என்று ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் அவனுக்கு சாப்பாடு உள்ளே இறங்கும்.

கிராமத்து வாழ்கையின் அன்றாட தேவைகளில் ஏதாவது ஒரு வேலை செய்யாமல் எந்த வீட்டு வாசலிலும் சாப்பாட்டுக்காக ஒரு போதும் நின்றதில்லை தொத்தன்....எனக்கு நினைவு தெரிந்தவரை! டீ சாப்பிடுவதாக இருந்தாலும் இந்த கொள்கையில் மாற்றம் இல்லை.சாப்பாடோ ,டீயோ ...முடிந்ததும் அவனுக்கு சிகரேட்டோ,பீடியோ கட்டாயம் இருக்க வேண்டும்.கொடுத்தால் வாங்கிகொள்வான்.இல்லையென்றால் யாராவது பெருந்தன்மையாக அல்லது ஸ்ட்டைளுக்காக பாதியில் அணைத்து போட்ட சிகரெட்டு துண்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு ஆனந்தமாக இழுப்பான்.அப்புறம் ராத்திரியானால்..கோயில் திண்ணை அல்லது அடைத்து கிடக்கும் எதோ ஒரு பொட்டிக்கடை பலகையில் படுத்து தூங்கிவிடுவான்.இவ்வளவுதான் தொத்தனின் உலகம்! இந்த வாழ்க்கைக்கு தொத்தன் எப்போது தயாரானான் என்பது குறித்து எவருக்குமே இதுவரை தெரியாது.
‘அவன் பொண்டாட்டி அவனை விட்டுட்டு ஓடிப்போயிட்டாலாம்...அதுலருந்தே இப்பிடியாகிட்டான்’என்ற ஒற்றை வரிக்குமேல் அவனுடைய வாழ்க்கை வரலாறு எவருக்குமே தெரியவில்லை!தெரிஞ்சு என்ன பண்ணப்போறோம் என்கிற அலட்சியமாகக்கூட இருக்கலாம்.

எப்போது ஊருக்கு போனாலும் தொத்தன் எங்காவது தட்டுப்படுகிறானா என்று பார்ப்பேன்.ஊரிலிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் அது வாய்க்காமலே போய்விட்டது.இந்த முறை தற்செயலாக எதிர்பட்டான்.அவனை முதன்முதலாக எப்படி பார்த்தேனோ...அப்படியேதான் இப்போதும் இருந்தான்.தோற்றத்தில் மட்டும் முதிர்ச்சி தெரிந்தது.கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும்.இப்போதும் வேலை செய்தபிறகுதான் சாப்பாட்டுக்கு உட்காருவது என்ற கொள்கையை மாத்தாமல்தான் இருக்கிறான்.அவனது பிடிவாதம் மாறாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

என்ன வேலை செய்வது என்பதுதான் அவனோட பிரச்சினையே!நான் ஊரை விட்டு வரும்போது சின்ன கிராமமாக இருந்த ஊர் இப்போது நகராட்சி அந்தஸ்து பெற்று புதுப்பொலிவோடு இருக்கிறது.கூரை வீடெல்லாம் கார வீடாகிவிட்டது.வீட்டுக்கு வீடு காஸ் அடுப்பு,குக்கர்,மிக்ஸி என்றான பிறகு விறகுக்கு எங்கே வேலை இருக்கிறது!?விவசாய வேலைகளும் யந்திர கதியாகிவிட்டது!மண் வேட்டுவதற்கே பொக்லைன் கொண்டு போகிற அளவுக்கு வாழ்க்கை வசதியாக மாறிவிட்டது.அறிவியல் கிராமம்வரை வந்ததுக்காக நான் சந்தோஷப்படுவதா....அல்லது தொத்தன் என்ன வேலை செய்துவிட்டு, யார் வீட்டு வாசலில் அடுத்த வேலை சாப்பாட்டுக்காக உட்காருவான் என்று கவலைப்படுவதா!?
“டே...தொத்தா...”
”வந்தேன்”.
”சாப்பிட்டியா”
“ம்...சாப்பிடணும்”

கொம்பு ரெக்கார்டு – 1


ப்போது ஊருக்கு போனாலும் சில சந்தோஷங்களும் சில சோகங்களும் ஞாபகக்கிடங்கில் படிமங்களாக உறைந்து போவதை ஒருபோதும் என்னால் தடுக்க முடிந்ததில்லை இப்போதும்!கில்லிதாண்டு,காக்கா குஞ்சு,கபடி,கிட்டிப்புள்ள,பம்பரம் சுத்துறது,தில்லித்தில்லி பொம்மக்கா என்று ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்த விளையாட்டுகள் எதுவும் இப்போதிருக்கிற குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நான் ஊரிலிருந்த போது பார்த்த மந்தை அம்மன் கோயில்,வட்டக்கிணறு,பெரியாத்து வாய்க்கால் என அத்தனையும் அப்படியே இருக்கிறது.அதில் விளையாடிய சிறுவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லை.

என்னைப்போல் பொழப்பு தேடி புலம் பெயர்ந்துவிட்டார்கள்.திருவிழாக்களின் போது மட்டும் புதுப்பொழிவு பெரும் சுண்ணாம்பு சுவர்களும் .....வாசனையும் காணோம்.முதல் மழை பெய்யும் போது மூக்கு நாசியில் வந்து ஒட்டிக்கொள்ளும் மண்வாசனை இல்லை.வீதியின் நீள அகலம் மாறாமல் அப்படியே இருக்கிறது.ஆட்கள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறார்கள்.ஒன்றிரண்டு பெருசுகள் மட்டும் “என்னப்பா வீரமணி மகனா நல்லாருக்கியா?” என்று விசாரித்துக்கொண்டு கிராமத்தின் சுவடுகளை சுமந்தபடி  தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகரீகங்கள் தேங்கிக்கிடக்கிற தெருக்களில் நடந்துபோகும்போது அசலூருக்குள் நடந்து போகிறமாதிரி அந்நியமாக இருக்கிறது எல்லாமே!

எனது குழந்தைபருவமும் பால்யமும் இப்படி இல்லை.என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் வட்டம் அதிகமாக இருக்கும்.குண்டன் சேகர்,
ஓவாரு ரவி,சுரேஷ்,மணிகண்டன் (இப்போது இவன் டாக்டர்)இன்னொரு மணிகண்டன்,பிரபாகரன்,மகேந்திரன்(சிவில் என்ஜினியர்)ஆண்டி மகன் கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.எல்லோருக்கும்  ஏகப்பட்ட கனவுகள்.அதிகாலை என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி கிரவுண்டில் ஒன்று சேருவோம்.சின்னச்சின்ன இடைவெளிகளில் மீண்டும் சேர்ந்தால் ராத்திரி தூங்கப்போகும்போது ராத்திரி பதினோரு மணியாகிவிடும் எல்லா நாட்களிலும்.

எங்களுடைய பேச்சில் அதிகம் சினிமாதான் இடம்பெற்றிருக்கும்.அண்ணன் எம்.ஆர்.பாரதி அப்போது உதவி இயக்குனராக இருந்தார்.அவர் எழுதுகிற கடிதங்களில் சினிமா பகிர்வு அதிகமாக இருக்கும்.அதுவே எனக்குள் சினிமா ஆசை வளர காரணமாக இருந்தது என்றுகூட சொல்லலாம்.நாளடைவில் அதுவே என் நண்பர்கள் வட்டத்தில் எனக்கு சினிமாக்காரன் என்று பேர் வர  காரணமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாக அதிகம் படம் பார்க்கத்தொடங்கினேன்.

கூடலூரில் அப்போது இரண்டு தியேட்டர்கள் மட்டும்தான்.எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் பி.எஸ்.சி தியேட்டர் இருந்தது.நினைத்த நேரத்தில் படம் பார்க்கிற உரிமை எங்கள் வீட்டில் மறுக்கப்பட்டிருந்தது.எங்கப்பா வீரமணி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.மரணத்தின் கடைசி தருணத்திலும் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது.வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை மட்டும் மாட்னி ஷோ பார்த்துக்கலாம்.அது எப்படி நம்மோட சினிமா அறிவை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருக்கும்!?அதற்காக அப்பவே ரூம் போடாமல் யோசித்து ஒரு காரியம் செய்தேன்.

மணி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ரொம்பவே சிரமப்பட வேண்டியதிருக்கும்.எங்க ஊரில் ஒரு வழக்கம்..படம் போடுகிற நேரம்வரை ஏகப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிக்கும்.கடைசியாக கொம்பு ரெக்கார்டு
போட்டால் படம் போடுகிற நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.காடு கரைகளுக்கு வேலைக்கு போகிற ஆட்களுக்குகூட அந்த பாட்டுதான் சாப்பாட்டுக்கான நேரம் என்று முடிவுபண்ணி வைத்திருப்பார்கள்.

அந்த பாட்டு ஒலிக்கும்போது தியேட்டருக்குள் போய் இடைவேளைவரை படம் பார்ப்பேன்.அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்துவிடுவேன்.அடுத்த நாள் இடைவேளை நேரத்துக்கு போய் மீதிப்படம்..இப்படிதான் இருந்தது எனக்கான சினிமா தாக்கம்.மணலைக்குவித்து அதன் மீது உட்கார்ந்து பார்த்த அனுபவம் இப்போது ஐநாக்ஸ் தியேட்டரில் பார்க்கும்போதுகூட இல்லை.                     - (இன்னும் தூசி தட்டுவோம்... )